‘அய்யகோ, என் மகனை யாரேனும் காப்பாற்றுங்களேன்,....’ அத்தாயின் கதறல் எங்குமாக சலனமித்திருந்தது. இப்பொழுதுதான் போர் மண்டலம் தாழ்ந்து பனியின் பெய்யொலி கேட்கத் துவங்கியிருக்கிறது. அதற்குள் குறட்டையொலியினூடே ஓலமா? காதுகளைப் இறுகப்பொத்திக்கொண்டு சிலர் புரண்டுப்படுத்தார்கள். என்னவோ, யாரோவென சிலர் எழுந்து சுக்கு நூறாய் தகர்ந்து, புகை அப்பிப்போயிருக்கும் சாளரம் வழியே எட்டிப்பார்த்தார்கள். யாழிவன் ஒருவன் மட்டும், அந்த நடுநிசியில் அலறலொலி வந்த திசையை நோக்கி நடந்தவனாக இருந்தான். அத்தெருவில் விழித்தவனாக, திடுக்கென விழிப்பவனாக இருப்பவன் அவன் ஒருவன்தான். தெருவே தூங்குகையில் தூக்க முணுமுணுப்பும் நினைவிலியில் உழறும் தாய், சேய்களின் துயரத் தவிப்பும் அவனைத் தூங்க விடுவதில்லை. ஒரு பிணத்தின் கேவுதல் கூட அவனுக்குக் கேட்கவே செய்யும். அன்றைய தினமும் அப்படிதான், கதறொலி கேட்டு முதலில் விழித்தானா, எழுந்தானா அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை, ஆனால் நடந்திருந்தான். காது செல்லும் திசையில் அவனது கால்கள் நடந்தன. ஒரு குடிசைக்குள் விளக்கு ஒளிர்ந்தது. விளக்கு என்பது வெறும் விளக்கு அல்ல, மனிதன் வாழ்கிறான் என்பதற்கான சாட...
அண்டனூர் சுரா