இ த்தனைக்கும் இருவரும் ஒரு நாளில் கருத்தரித்து ஒரே நாளில் பிறந்தவர்கள். அவன் பெயர் ராசு , இவள் ராசி . இருவருக்குமிடையில் ஐந்து நிமிடங்கள் மூப்பு, இளமை , இருவரில் ராசிதான் மூப்பு . இருவரும் அத்தனை அன்பாக, நெருக்கமாக இருந்தவர்கள்தான். ராசு என்று அழைத்தாலும், ராசியென அழைத்தாலும் இருவருமே ஒரு சேர திரும்பிப் பார்த்தவர்கள்தான். ஒரே தட்டில் சாப்பிட்டு, ஒன்றாகக் கிளம்பியவர்கள்தான். யார் கண் பட்டதோ, இருவரும் இரு வேறு கிரகவாசிகளைப் போல நடந்துகொள்கிறார்கள். இத்தனைக்கும் அவர்களின் வயது பத்து முடிந்து பதினொன்றேதான். அவர்களுக்குள் சண்டை, சச்சரவு நடந்தேறுகையில் அவளால், அந்தக் குரங்கையும் நாயையும் நினைக்காமல் இருக்க முடியவில்லை. தஞ்சாவூர் ராஜா மிராசுதார் மகப்பேறு மருத்துவனையில்தான் இருவரையும் பெற்றெடுத்தாள். மகள் சுகப்பிரசவம். மகன் அறுவை சிகிச்சை. தொப்பூழ்கொடி தலைசுற்றி பிறந்தவன் ராசு. பானுமதி பிரசவம் முடிந்து, ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கியிருந்து தாயும் குழந்தையுமாக வார்டிலிருந்து வெளியேறுகையில் அவளது தாய் பேரனைத் தூக்கிக் கொண்டாள். நாத்...
அண்டனூர் சுரா