‘அதுதான்க இது...’ செந்தில்நாதன் சொன்னதும் பஞ்சாயத்தாரர்களுக்கு கண், மண் தெரியாத கோபம் நாசியில் வெடித்தது. பின்னே, எத்தனை முறை, எத்தனை சுற்றுக்கேள்விகள். கடைசியில் அதுதான்க இது என்கிற ஒன்றை மட்டுமே பதிலாகச் சொன்னால் எப்படி. இம்...? அவனைச் சூழ்ந்து நின்றவர்கள் அவனை அடித்து, கும்மி, பிழிந்து காயப் போடாத குறையாக ஆத்திரம் பொங்க நின்றுகொண்டிருந்தார்கள். செந்தில்நாதன், ஒரு பதட்டமுமில்லாமல் ஆசுவாசமாக நின்றுகொண்டிருந்தான். ஒவ்வொரு விரலையும் விரல்களுக்கிடையில் கொடுத்து, நெட்டிப் பறித்தவாறு கவுண்டமணியாரை பார்த்தான். பலருக்கு, அவனை அடித்து மூக்கு முகறையெல்லாம் பிய்க்க வேண்டும் போலிருந்தது. கவுண்டமணியார் விரல் நீட்டி அவனை அருகினில் அழைத்தார். அவரது அழைப்பில் மிரட்டலும், எப்படியேனும் உண்மையைக் கறந்துவிட வேண்டும் என்கிற தொனிப்பும் நா, கண்கள், உதடுகளின் வழியே துருத்திக்கொண்டிருந்தன. கவுண்டமணியார், ஊரின் பெருந்தலை. நாட்டாமைக்காரர். பெரிய மீசை வைத்த நிலக்கிழார். புலியின் மீசையையொத்த மீசையை புறங்கையால் நீவி விட்டபடி எச்சிலை எச்சில் கோப்பையில் ‘ பொளிச்..’ எனத் துப்பினார். பிறகு இடுப்பில் தொங்க...
அண்டனூர் சுரா