முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தடுக்கை

துச்சலைக்கு வந்திருந்த அதே சந்தேகம்தான் பீமனுக்கும் வந்திருந்தது. சித்தப்பா மக்கள், பெரியப்பா மக்கள் ஒத்த காந்த துருவங்களாக ஒருவரையொருவர் விலக்கி நின்றாலும் இருவருக்குள்ளும் எழுந்திருந்த சந்தேகம் ஒன்றாகவே இருந்தது. துச்சலை வாய்த்துடுக்கானவள். தேளின் கொடுக்கைப்போல வாய்க்குள் எப்பொழுதும் கேள்விகள் துருத்திக்கொண்டிருக்கும். ஒரு செல்லத்திற்கே குடுமி எப்படியெல்லாமோ ஆடும். இவள் நூறு செல்லத்தவள். போதாக்குறைக்கு தாய், தந்தை செல்லம் வேறு. சொல்லவா வேணும்...?

       அஸ்தினாபுரம் அரண்மனை முற்றத்தில் தொங்கிக்கிடந்த ஊஞ்சலில் சாவகாசமாக உட்கார்ந்துகொண்டு, இரு கைகளையும் சங்கிலித் தொடர்களுக்கிடையில் பின்னிக்கிடந்த முல்லை கொடியைப் பிடித்துக்கொண்டு கால்களை நேராக நீட்டி வழியில் போகிறவர்கள், வருகிறவர்களை அழைத்து கேள்வி கேட்டுகிறவள். அவளது கேள்விக்குப் பதில் சொல்வதற்கென்றே அரண்மனையில் கொஞ்சப் பேரை வேலைக்குப் பணித்திருந்தான் துரியோதனன். கேள்வி, கேள்வி மேல் கேள்வி கேட்கிறவளல்ல துச்சலை. கேள்விக்குள் கேள்வியென நுழைக்கிறவள். அன்றைய தினம் கேள்வியை  வழிப் போக்கர்களிடமோ, அரண்மனைவாசிகளிடமோ கேட்டிருக்கவில்லை. அண்ணன்களின் வருகைக்காக எந்நேரமானாலும் பரவாயில்லையென காத்திருந்தாள்.

       கிஜா புயல் அஸ்தினாபுரத்தை மட்டுமல்ல, அரண்மனையையே களைத்து ஆடியிருந்தது. என் அண்ணன்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த நேரம் பார்த்தா, இப்புயல் கண், மண் தெரியாமல் அடிக்க வேண்டும், அரண்மனைவாசிகளிடம் பேசிக்கொண்டிருந்தவள் அவளுக்குள் எழுந்த சந்தேகத்தை சட்டென யாரிடமும் கேட்டுவிடவில்லை.

       புயல் ஓய்ந்து ஒரு வாரம் கடந்து மக்களுக்குத் தடுக்கை கொடுக்க கந்தல் துணி, பிய்ந்த சட்டைகள், புழுத்துப்போன அரிசி, செப்புக்காசு, மெழுகுவர்த்தி, போர்வையென ஏற்றிச் சென்று, நூறு பேரும் வட்டம் கட்டி, தள்ளுமுள்ளுக்கிடையில், கொடுக்க முயன்று கொடுக்க முடியாமல் கண்கள் சிவந்து, இமைகள் வெந்து, களைத்து, வெறுத்து அரண்மனைக்குத் திரும்பிய உடன்பிறப்புகளை கைநீட்டி நிறுத்தினாள். அவர்கள் பெருமூச்சு வெடிக்க தங்கையை ஏறிட்டுப் பார்த்தார்கள். ‘ அண்ணா, தடுக்கைப் பொருட்களை எல்லோருக்கும் கொடுத்து விட்டீர்கள் தானே...?’

       துரியோதனை அவள் வழி மறித்துக்கேட்டாலும் அவளுக்கான பதில் துச்சாதனிடமிருந்து வந்தது ‘ இல்லை தங்காய்....’

       ‘ எத்தனை பேருக்கு உங்களால் தடுக்கை கொடுக்க முடிந்தது...?’

       ‘ எப்படியெல்லாமோ முயன்று பார்த்தோம் தங்காய், ஒருவருக்கேனும் எங்களால் கொடுக்க முடியவில்லை. அரசர், அரசவை என்று பாராது மக்கள் எங்களை விரட்டியடிக்கிறார்கள்...’

       அண்ணன்களின் பதில் ஏமாற்றமாக இருந்தது. அவளுடைய முகம் பறித்த நான்காம் நாள் செம்பருத்தி இதழ்களைப்போல சோர்ந்தது. ‘ என்ன தங்காய், ஏன் இந்த முகமாற்றம்...?’

       ‘ கர்ணன் இருக்கிறான் இல்லையா...?’

       ‘ ஆமாம்,   அங்கா நாட்டு மன்னன்...’

       ‘அவன் தேர்,தேராக ஏற்றிச்சென்ற அத்தனை நிவாரணப் பொருட்களையும் சடுதிக்குள் கொடுத்து விட்டானாமே, எப்படியாம்..?’

        அவள் இதை  குதலை மொழியில் சொல்லியிருந்தாலும் அக்கேள்வியால் துரியோதனன் ஒரு கணம் ஆடித்தான் போனான். அவன் ஆடும் நிழலைப் பார்த்து அவனது பரிவாரங்கள் ஆடின. அரண்மனையின் பாதர விந்தங்கள் ஆட்டம் கண்டன.

       பீமன், தன் சகாக்களிடம் கேட்டது இதே கேள்வியைத்தான். அவன் கேட்டிருந்தக் கேள்வி தாய் குந்திதேவிக்கும் கேட்டிருந்தது. மண்ணையும், பெண்ணையும் பகடையால் தோற்று மகன்களின் நிர்கதியை நினைத்து உள்ளுக்குள் அழுகிக்கொண்டிருந்தாள் குந்திதேவி. காணி நிலமற்று வனாந்திரம் புகுந்து, கிளைக்குக் கிளைத் தாவும் மந்தியைப் போல ஒவ்வொரு வனமாக ஏதலி வாழ்க்கை வாழ்கையில் இந்நேரம் பார்த்தா கிஜா சண்டமாருதம் புரிய வேணும்...? அது தானாக வந்ததோ துரியோதனன் அனுப்பி வந்ததோ, மரங்கள் வேர் பிடுங்கி வானம் கீழாகவும், பூமி மேலாகவும் கிடக்க, வெயிலுக்கு ஒதுங்க கிளை, மழைக்கு ஒடுங்க புதர்களில்லாமல், வாழ்க்கை வாழையாக சிதைந்து கிடைக்கையில் இந்நேரம் பார்த்து பீமன் கேட்கும் கேள்வியைப் பாரும், அவனை நினைத்து மனதிற்குள் நொதித்துக்கொண்டாள். கேள்வி கேட்கும் நேரம்தான் அவளை எரிச்சலூட்டியதே தவிர கேட்டக் கேள்வியில் கர்ணன் இருந்ததால் அக்கேள்வி அவளுக்குப் பிடித்திருந்தது. எதையும் முரட்டுத் தனமாக மட்டுமே செய்ய முடிந்த ஒருவனால் இப்படியான அறிவார்ந்த கேள்வியைக் கேட்க முடியுமா, பீமனை நினைத்து மனம் பூரித்தாலும் மனதிற்குள் உருண்டது என்னவோ கர்ணன்தான். 

       பஞ்சவர்களில் பீமனைத் தவிர மற்றவர்கள் பதில் சொல்லுமிடத்திலிருந்தார்கள். பதில் சொல்லி அவர்கள் களைத்தும் போயிருந்தார்கள். பாவம் சகாதேவன், அவன் விளக்கிய விளக்கலில் கண்களின் ஈரப்பதம் வற்றி, நா துவண்டு உதடுகள் வெடித்திருந்தன. அர்ச்சுனன் சாரங்கம் உதைத்த சரமழையில் சொற்களைப் பிரயோகித்தான். அவன் களைப்புறும் நேரம் பார்த்து உள் நுழைந்தான் தர்மன். சொல்லறிந்து சொல் எறிகிறவன் அவன். அவனாலும் கூட பீமனின் சந்தேகத்தைத் தணிக்க முடியவில்லை. வேறு வழியில்லாமல் நுழைந்த நகுலன், கடிதொச்சி எறிந்தான். எத்தனை சுற்று விளக்கம், எத்தனை கட்டு உதாரணம், களைத்தது மட்டுமல்ல, அலுத்தும் போனார்கள். ‘ உங்களுக்கெல்லாம், வாய் வலிக்கிறதா இல்லையா,...?’ சகாதேவன் கோபத்தில் தெறித்தான். அவ்வளவேதான், நால்வரும் வாயடைத்து வேர்ப் பிடுங்கிக் கிடந்த மரத்தடி தண்டில் உட்கார்ந்தார்கள்.

       பீமன் அப்பொழுதேனும் விடுவானா, என்றால் இல்லை. அவள் மெல்ல தாயின் பக்கமாகத் திரும்பி, தாயிடம் குலாவி ‘ அம்மா, நீயாவது சொல்லேன், அந்த கர்ணனால் அது எப்படியம்மா முடிந்தது...?’ குந்திதேவி தலையில் கிடந்த தலைப்புச் சேலையை முன்,பின் எடுத்து விட்டுக் கொண்டு பீமனைத் திரும்பிப் பார்த்தாள். ‘ அவன் நரதுங்கன்டா...?’

       ‘ அப்படியென்றால்...?’

       ‘ மனித பிறவியிலேயே சிறந்தவன்...’

       ‘ இருக்கட்டுமேயம்மா, எப்படி சடுதிக்குள் அவ்வளவு நிவாரணத்தையும் கொடுக்க முடிந்தது...? உன்னால் முடியுமா, இதோ நம் விரோதி பங்காளிகள் தடுக்கை பொருட்களைக் கொடுக்க வண்டி கட்டிச் சென்றார்கள். அவர்களால் அஸ்தினாபுரம் தெருவிற்குள் நுழைய முடியவில்லையே, எத்தனை எதிர்ப்புகள், கலவரங்கள், கல் வீச்சு, வசைப்பாடல்கள். அவர்களால் பொருட்களை இறக்கி வைக்க மட்டுமே முடிந்திருக்கிறது. இத்தனைக்கும் அவர்களிடமிருந்தது இருநூறு கைகள், அதைக் கொண்டு அவர்களால் நூறு பேருக்குக் கூட தடுக்கை நீட்ட முடியவில்லை. இத்தனைக்கும் கிழிந்த கந்தல்துணி , அரிசி, பருப்பு, எண்ணெயும், மெழுகுத்திரி,.. ஆனால் கர்ணன் என்ன அப்படியா, அவன் கொண்டுச் சென்றது வெறும் அரிசியும், பருப்பும், தினை மட்டுமா...?’

       ‘ வேறு...?’ மகனின் வியப்பிற்குள் வியப்புக்குறியென நுழைந்தாள்.

       ‘ அய்யோ, அம்மா, என் இரு கண்களால் பார்த்தேன். கோடைகால மேகத்தைப் பார்த்திருப்பாயே, அத்தனை வேகம், தங்கக் குடத்தில் தங்கக் காசுகள், வெள்ளிக்குடத்தில் வைர கற்கள், குடம், குடமாக, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, கட்டி, நூறு தேர்கள். மழலை நடை பயில்கையில் காலிலிருந்து எழும் கிண் கிணியைப் போல சப்தம். அந்தோ! அக்காட்சியை நான் எப்படி வர்ணிப்பேன். தாயே, கிஜா புயலின் வேகத்தை உன்னால் வர்ணிக்க இயலுமா, இயலாது தானே, அப்படிதான்! அவனது தடுக்கை உதவிகளை வர்ணிக்க வார்த்தைதான் ஏது..? அவ்வளவையும் கொண்டுச்சென்று எங்கே நிறுத்தினான், எப்படி இறக்கினான். எத்தனை மக்கள், எத்தகைய இழப்புகள், வீடு இழந்தவர்கள் எத்தனை பேர், உடைமையை பறிகொடுத்தவர்கள் எத்தனை பேர், எப்படி கொடுத்தான், யார் யாருக்குக் கொடுத்தான்,  என்னென்ன கொடுத்தான், ஒன்றும் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் கொடுத்திருக்கிறான், சடுதிக்குள், வெள்ளி முளைத்து ஞாயிறு உதிப்பதற்குள்...’

       பீமனின் வர்ணனையால் அர்ச்சுனனுக்கு தலை கால் புரியாமல் கோபம் வந்தது. வந்த கோபத்தில் வில்லை எடுத்தான். அதற்குள் அம்பைச் சொறுகி பீமனின் நாசிக்கு நேராக குறி வைத்தபடி சொன்னான், ‘ பீமா, நீ என் அண்ணனென்று பார்க்கிறேன், இல்லை, அந்த கௌரவர்கள் மீது இருக்கிற கோபத்தை உன் மீது காட்டி விடுவேன்....’

       தர்மன் ஓடி வந்து குறுக்கிட்டான் ‘ அடேய், அர்ச்சுனா, என்ன வேலை செய்கிறாய்....?’

       ‘ பிறகு என்ன அண்ணா, அவனைத்தான் பாரேன். விடிந்ததிலிருந்து கர்ணன், கர்ணனென்று ஆயிரம் முறை உச்சரித்து விட்டான். இவனுக்கு கர்ணன் மீது அப்படியென்ன ஈரம்...? அவனைச் சற்று வாயை மூடச் சொல்லும். இல்லை, என் அம்பால் அவனது வாயைத் தைத்துவிடுவேன்...’

       அர்ச்சுனன் கொண்ட கோபத்தைப் பார்க்கையில் குந்திதேவி குலை நடுங்கி போனாள். இந்நேரத்தில் உள் நுழைந்து பீமனுக்கு ஆதரவாக சொல் புனைந்தால் கர்ணன் என் மகனென்று பஞ்சவர்களுக்குத் தெரிந்துவிடுமோ, வாய் வரைக்கும் வந்த வார்த்தையைச் சட்டென விழுங்கி என்னச் சொல்வதென்று தெரியாமல் விழித்தபடி இருந்தாள்.

       ‘ அடேய், அர்ச்சுனா, இங்கே வாரும்...’ எழுந்த பீமன் அர்ச்சுனன் கையிலிருந்த வில், அம்பை விலக்கி அவனை இடுப்போடு அணைத்து அவன் உட்கார்ந்திருந்த இடத்தில் அமர வைத்தான். ‘ சரி அர்ச்சுனா, நாம் இன்று ஏதலி அல்ல. அஸ்தானிபுரத்தை ஆள்வதாக வைத்துக்கொள்ளும். கிஜா புயலால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து, உடை, உடைமைகளை இழந்து, கையேந்தி நிற்கிறார்கள். நீயும் , நானும் உதவிப் பொருட்களைக் கொண்டு செல்கிறோம். நீயே சொல்லும், நம்மால் ஒரே நிமிடத்திற்குள் அத்தனை பேருக்கும் தடுக்கை நீட்டி விட முடியுமா...?, அதையும் அவர்களின் தேவையைக் கேட்டறிந்து, அவர்கள் கேட்பதற்கு மேலாக,..எங்கே சொல்லும் பார்க்கலாம்....’. அர்ச்சுனனால் பதில் தேட முடிந்திருக்கவில்லை.

       துவைத வனத்தில் இதே கேள்விதான். விளக்கத் தெரியாமல் விளக்கி துச்சலை முன் துரியோதனன் மண்டியிட்டிருந்தான். அவன் அஸ்தினாபுரத்தின் மன்னன். கதை கட்டுவதில் பீஷ்மரை மிஞ்சியவன். வாய்ப்பந்தல் அவனுக்குத்தான் பொருந்தும். அவன் தங்கையை சந்தேகத்திலிருந்து விடுவிக்கும் பொருட்டு எப்படியெல்லாமோ வாய்ப்பந்தல் நட்டான். அவனுடன் அவனது அமைச்சர்கள் கூட சேர்ந்து கொண்டார்கள். சகுனி கூட உள்ளே நுழைந்து பார்த்தான். துர்மதன் விளக்கிப் பார்த்தான். அடுத்தடுத்து அவளது அண்ணன்கள் தொண்ணூற்று ஒன்பது பேரும் வந்தார்கள். துச்சலை மீது பேரன்பு காட்டும் விகர்ணனால் கூட அவளது சந்தேகத்தை நிவர்த்திக்க முடியவில்லை. இத்தனைக்கும் துச்சலை வயதால், பருவத்தால் இளையவள்.

       ‘ எப்படியண்ணா முடிந்தது அந்த கர்ணனால் மட்டும்...?’. ஒரே கேள்விதான். சற்று முன் கேட்ட அதே கேள்விதான். முதல் முறையாகக் கேட்பதைப் போலதான் ஒவ்வொரு முறையும் கேட்டாள்.  கேட்டக் கேள்வியைக் கேட்பதே தெரியாமல் ஓராயிரம் முறை கேட்டிருந்தாள். அவள் கேட்ட ஒற்றை  கேள்விக்கு ஒரே பதிலையே அவர்கள் சொல்லிக்கொண்டிருக்கவில்லை. பதிலில் மாயாஜாலம் புனைந்து, ஜீபூம்பா சேர்த்து சொற்களைக் கண்ணிகளாக முடிந்து அவள் முன் வைத்துப் பார்த்தார்கள். ஏமாற்றமே மிஞ்சியது.

       அவள் மீது அவர்களுக்கு கோபம்தான் வந்தது. அதை வெளிப்படுத்த அவர்களிடம் சுரம் இருந்திருக்கவில்லை. காதடைத்து, கண்ணடைந்து, வாய்ப்பொத்தி வீழ்ந்தவர்கள் மயக்கம் தெளிந்து துச்சலையை அழைத்துக்கொண்டு நேரில் சென்று கேட்டுதான் வந்து விடுவோமென தேர்ப்பூட்டி அங்கா நாட்டை நோக்கி விரைந்தார்கள். அங்கு அவர்களுக்கு முன்னால் பஞ்சவர்கள் இடம் பிடித்திருந்தார்கள்.

      

       ஸ்தினாபுரம் நாட்டை நோக்கி தேர்களைப் பூட்டினான் அங்கா தேசத்து மன்னன் கர்ணன். அவன் பூட்டிய நூறு தேர்களில் சரிபாதி பொன், முத்து, வைர முடிச்சுகள். தங்க , வெள்ளி குடங்கள். இன்னும் பாதியில் தவசம், பயிறு, கடலை, விதை, முத்து, கொட்டை, நெற்றுகள். அவன் தலையில் சூடிய மகுடத்திலும் கூட நவ தவசங்களை முடிந்திருந்தான்.

       காமதேனு மடியைப் போல தேர். ஒவ்வொரு குலுங்களிலும் கிண், கிணிப்புகள். சுமையால் தேர் அச்சுகள் முறிய, சக்கரங்கள் புழுதிக்குள் புதைய, ஒவ்வொரு திருப்பத்திலும் கீழே இறங்கி தேர்ச்சக்கரத்தை ஒரே ஆளாக மேட்டில் ஏற்றி குதிரைகளின் நாக்கு வெளியே தள்ள, மூச்சு இறைக்க குதிரைகளை விரட்டி தேர்களை அஸ்தினாபுரத்தில் கொண்டு வந்து சேர்த்தான். அவன் நினைத்த எல்லையைத் தொட்டதும், ஒன்று நினைத்தான். எத்தனை மெனக்கெடல், எவ்வளவு வியர்வை, இவ்வளவு பொருட்களையும் உரிய மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும். கொடுத்தவர்களுக்கே திரும்பவும் கொடுக்காமல், கொடுக்கும் நபருக்கு அரைகுறையாகக் கொடுக்காமல், கொடுத்தப் பிறகு போதுமா எனக் கேட்காமல், எவ்வளவு தேவை எனக் கேட்டுக் கொடுக்க வேண்டும். கேட்டதை விடவும் மிகுதியாகக்  கொடுக்க வேண்டுமென நினைத்தான் கர்ணன். எல்லையைத் தொட்ட பூரிப்பில் வரிசைக்கட்டி நின்ற தேர்களை ஏறிட்டுப் பார்த்தான். அவன் கண்களுக்கு எட்டிய மட்டும் பொருட்களாக இருந்தன. அவன் பெருமூச்சொரிகையில் அவனது மார்பில் தழுவிக்கிடந்த ஆபரணங்கள் வியர்வையில் நனைந்து பதத்துக் குலுங்கின. இரவு மூன்றாம் பிறை துளர்க்க பூட்டிய தேர், அஸ்தினாபுரத்தை வந்தடைகையில் வெள்ளி முளைத்திருந்தது.

       தேர்களை ஓரிடத்தில் வரிசைக்கட்டி நிறுத்தினான். பொருட்களை இறக்கி ஒரே இடத்தில் சேர்த்து குன்றுகளாக்கினான். குன்றுகள் ஒன்றுடன் ஒன்று நிரவ, பரவ மலைத்தொடர்களாகின. இவ்வளவையும் தன் கையால் கொத்தாக அள்ளி இக்கணமே யாருக்கேனும் கொடுக்க வேண்டும் போலிருந்தது. கொடுப்பதற்கு உகந்ததாக விரல்கள் பணிந்து உள்ளங்கை தசைகள் திரண்டுப் போயிருந்தன.

       கொடுக்கப் பிறந்தவனாக இருந்தான் கர்ணன். இரண்டு கைகளும் கொடுப்பதற்கென்றே படைக்கப்பட்டிருந்தது. கிஜா புயல் சேதாரங்களிலிருந்து மக்களை இன்றைக்குள் மீட்டுவிட வேண்டுமென நினைத்தான். இது போதுமா, வீடு இழந்த ,காடு கழனி இழந்த, வனம் இழந்த, வனாந்திரம் இழந்த, மரம், செடி, கொடி இழந்த, விதை, வித்து,நெற்று இழந்த மக்களுக்கு இந்தத் தடுக்கை பொருட்கள் போதுமா,...? போதாது என்றவன் அவனது கழுத்தில் தொங்கிக்கிடந்த பலமணி மாலை, தண்டை, பவளவடம், தொடி கங்கணம், வண்ணசரம், முத்துவடம் இவ்வளவையும் தலையோடு அவிழ்த்து குவித்திருந்த குன்றின் மீது வீசினான். அது விழுந்த அதிர்வில் குன்றிட்டிருந்த பொன் பொருட்கள் சரசரவென சரிந்து உயரக் குன்று அகலக் குன்றாக பெரு வட்டமடித்தது.

       அவனது உள்ளங்கைகள் அரித்தன. பொருட்களை அள்ளிக் கொடுப்பதற்கு முன் எடுக்கும் அரிப்பாக அது இருந்தது. அவனால் ஓரிடத்தில் நிற்க முடியவில்லை. பொழுது எப்பொழுது விடியும், மரங்களற்ற திசையில் கிழக்கைத் தேடினான். இத்தனைக்கு இது அவனது நாடல்ல. அருகாமை நாடு. ஆனால் இம்மக்கள், மக்களின் இழப்புகள், அவர்களின் தாகம், பசி, ஏக்கங்கள்...?.அதற்கு ஏது தேசம்...!

       முழுமையாக விடிந்திடாத வைகறையில் ஓர் ஆளரவம் தெரிந்தது. கிழவி என்று சொல்லக்கூடிய அளவிற்கு வயதானவளில்லை. கன்னி என்று சொல்லுமளவிற்கு  குமரியுமில்லை. பழமில்லாத, பிஞ்சுமில்லாத காய் பருவத்திலிருந்தாள். பச்சையும், கரள் நிறத்திலுமான ஆடை. கரையற்ற சேலை. சேலையின் தலைப்பால் முழு உடம்பையும் இறுகப் போர்த்திக்கொண்டு மண்ணுக்கு வலிக்காதப்படி நடந்து வந்தாள். முழங்கல் சத்தங்கள், கண்ணீர் வடிப்பு, இடியென பெருமூச்சு. கடலில் மூழ்கியவள் கடனிலும் மூழ்கிய துயர முகம். இன்னும் மலர வேண்டிய மலர் மலர்வதற்குள்ளாக சருகான முகச்சரடு. தன்னை யாரும் பார்த்து விடுவார்களோ, விரட்டி பிடித்து விடுவார்களோ, திரும்பி பார்த்துக்கொண்டு, கொலை பயம், உயிர் பயத்துடன் நடந்து வந்தாள்.

       நெருப்பில் நடப்பதைப் போல வேகமில்லாது, தொய்வில்லாது நடந்து வந்தவள் கர்ணன் முன் நிற்கையில் அவளது மூச்சுக்காற்று கர்ணனின் மார்புக்கூட்டைத் தகித்தது. கர்ணன் சற்று நிமிர்ந்து, மெல்லக் குனிந்து அவளைப் பார்த்தான். பொறியிலிருந்து தப்பி வந்த ஒரு பறவையின் பரிதவிப்பு,படபடப்பு.

       ‘ தாயே....’

       கர்ணனை அவள் ஏறிட்டுப் பார்க்கவில்லை. கைகளை மட்டும் காட்டினாள். எத்தனையோ பேர்களுக்குக் கொடுத்துச் சிவந்த கரம். காலத்தின் கதி கையேந்தி நிற்கிறேன். வாய்ச்சொல்ல வேண்டிய ஒன்றை அவளது உள்ளங்கைகள் சொல்லி நிறுத்தின. நீண்ட கை மேலும் மேலும் நீண்டது.‘ வாழ்ந்து கெட்டவருக்கு உதவும் கொடை நீண்ட புகழ் பெறும். உதவுங்கள் பிரபுவே...’

       கண்ணீரில் நனைந்த குரல் வெண்திரையில் தெரிந்தது. முழுமையாக விடியாத அப்பொழுதில் அவளது தேவையை அவனால் கணித்தறிய முடியவில்லை. ஒரு தங்கக் கலசத்தை எடுக்கப் போனான். போதாதென்று கலசமும், பானையும், திவசமும் கொண்ட ஒரு பெரிய முடிச்சை எடுக்க கையை  நீட்டினான். அதுவும் போதானென்று ஒரு தேர் பொருட்களை ஒரே மூட்டையாகக் கட்டி அவள் முன் நீட்டலாமென நினைத்தான்.

       ‘ என்ன பிரபுவே, என் இன்னல் கேளாது, என் பிணக்கம் பாராது இதைக் கொடுக்குறீரே....?’

       கர்ணனுக்கு திடுக்கென இருந்தது. கொடுக்க நினைத்த ஒன்றை வாங்கியவளைப் போல கேட்கிறாளே, கர்ணனின் நெற்றி சுருங்கி விழிகள் விரிந்தன. அத்தாய் முன் வளைந்து முகத்தை ஏறிட்டு கேட்டான், ‘ சொல்லும் தாயே, உனக்கு ஏற்பட்ட இன்னல் என்ன, உன் வறுமையைச் சொல்லும். அது மலையளவானாலும் அதை  நான் போக்குகிறேன்...’

       ‘ கர்ண பிரபுவே, அவ்வளவையும் நீ ஏற்க வேண்டாம். என் சுமையின் ஒன்றை மட்டும் போக்கும். அது போதும்..’

       கர்ணன் அத்தாயை நினைத்து பூரித்தான். இத்தாயின் சொல் உண்மையானால் புயல்கள் என்ன அத்தனை அன்புடையனவா, அது கொடுக்கும் சீற்றம் அத்தனை நேசம் படைத்தனவா..? இக்கலியுக காலத்தில் இப்படியொரு தாயா..? ‘ சொல்லும் தாயே, உன் இன்னல் என்ன,...?’

       ‘கர்ணா, கொஞ்சக் காலம் உடல் நலம் குன்றி ஒரு மருத்துவரிடம் தீவிர சிகிச்கை எடுத்துக்கொண்டேன். அங்கு நான் என்ன தின்றேனோ, எதை மென்றேனோ தெரியவில்லை. நான் உட்கொண்ட இடியாப்பத்தின் செலவீனத்தை மட்டும் ஏற்றுக்கொள்ளும் கர்ண பிரபுவே...’

       கர்ணன் ஒரு கை நீட்டி அவளுக்கு வாக்குக் கொடுத்தான் ‘ இக்கணமே அக்கடன் சுமையை ஏற்கிறேன் தாயே...’

       அத்தாய், கையை மடிக்குள் திணித்து மடியிலிருந்து ஒரு செப்பு பட்டயத்தை வெளியில் எடுத்து கர்ணன் முன் நீட்டினாள். அதை வாங்கிப் பார்த்தான் கர்ணன். இடியாப்பத்தின் கணக்கு நீளத்தை விடவும் அகலமுடையதாக இருந்தது. கர்ணன் நிமிர்ந்து அத்தாயைப் பார்த்தான். திரும்பி மலைகளாகக் குவித்து வைத்திருந்த தடுக்கை பொருட்களைப் பார்த்தான். கையிலிருந்த இடியாப்பக் கணக்கைப் பார்த்தான். கிஜா தடுக்கைக் கென்று ஏற்றி வந்த பொருட்கள், மக்களிடம் போய்ச் சேர்ந்தாக வேண்டிய பொருட்கள்,...அதை நினைக்கையில் அவனது இதயம் படபடத்தது. வாக்குறுதி அவன் முன் கைக்கட்டி நின்றது. அவன் உடுத்தியிருந்த ஆடையை அவிழ்த்து அவளிடம் கொடுத்து ‘ இதையும் சேர்த்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள் தாயே...’  என்றவன்  அங்கா நாட்டை வந்தடைகையில் பொழுது விடிந்தும் மர்ம இருள் விலகாது இருந்தது.
 
                                                                              - நன்றி - ஸ்ரீலங்கா  தாயகம் மார்ச்- ஏப்ரல் 2019 இதழ்
 
 
.

                                                             

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பசலி

வரலாற்றுப்புனைவு ஒ ட்டப்பிடாரம் தாலுகா ஆபிஸ் நடக்கயிருக்கின்ற ஜமாபந்தியால் களைக்கட்டியிருந்தது. அவ்வூரை தாலுகா கிராமமாக அறிவித்ததன் பிறகு கூடும் முதல் ஜமாபந்தி என்பதால் பந்தல்கால் ஊன்றுதல் தொடங்கி தண்ணீர் பந்தல் அமைக்கிறது வரைக்கும் வேலைகள் மும்முரமாக நடந்தேறின. அவ்வூருக்குப் புதிதாக நியமிக்கப்பட்டிருந்த தாசில்தார் பஞ்சமன் அத்தனை வேலைகளையும், தனி ஒருவராக வரிந்துகட்டி செய்துகொண்டிருந்தார். அதிகாரிகள் மனு வாங்குவதற்கும் மக்கள் உட்கார்ந்து இளைப்பாறுவதற்கும் உகந்ததாக பெரிய பந்தல் போடப்பட்டு , அதில் வைக்கோல் நிரவி தண்ணீர் தெளித்து அதன் மீது பின்னிய பனைமட்டைகள் விரிக்கப்பட்டிருந்தன. பஞ்சமன் திட்டமிடலின் பேரில் ஜமாபந்தி நடப்பதால் பொது மக்கள் வருமிடங்களிலும் நடைபாதையிலும், அவர்கள் இளைப்பாறுவதற்குக் கூடுமிடங்களிலும் பெரிய மண்சால்களில் தண்ணீர் வைத்தார். ஜமாபந்தியில் எத்தகைய மனுக்கள் வாங்கப்படும் என்கிற செய்தியைப் பட்டித் தொட்டியெங்கும் தண்டோரா போட்டு அறிவிக்கச் செய்தார். ஒரு நாளைக்கு நான்கு ஊரென ஒரு வாரகாலம் நடைபெறும்   ஜமாபந்தி அது. தாசில்தாரரின் அறிவித்தலின் பேரில் ஊர் தலையாரிகள் ...

விராட்டி

வெ ள்ளி முளைக்கிற நேரத்துக்கெல்லாம் சீனிக்கடை முக்கத்திற்கு வந்திருந்தாள் பார்வதி. இத்தனை ஆண்டுகளில், இத்தனை சுருக்காக அவள் எழுந்ததில்லை, இங்கே வந்ததுமில்லை. வீட்டிலிருந்து கிளம்பி, கூடைகளை ஒன்றுக்குள் ஒன்றாக அடுக்கி, இடுப்பில் வைத்துக்கொண்டு, வாசலைத் தாண்டுகையில் முதல் சேவல் கூவியிருந்தது. எப்போதும் சேவல் கூவிதான் பார்வதி எழுந்திருப்பாள். அன்று, அவள் எழுந்து சேவல் கூவியிருந்தது. இரவு அவள் தூங்கியல்லவா, அவளை சேவல் எழுப்ப வேண்டும். இரவு அவளைக் கண் விழித்துப் பார்த்திருந்ததைப் போலதான், அன்றைய இரவு அவளுக்கு இருந்தது. அவளுக்கும் வயது நாற்பதைத் தாண்டிவிட்டது. இதுநாள் வரை இப்படியான அவமதிப்பை அவள் எதிர்கொண்டதில்லை. இத்தனைக்கும் அவளை அப்படியாகக் கேட்டவன், இருபத்தைந்து முப்பது வயதுக்குட்பட்டவனாகவே இருந்திருந்தான். அவன் கேட்டிருந்த அக்கேள்வி, காது வழியே நெஞ்சுக்குள் இறங்குகையில், அடிவயிறு குடலுடன் சேர்ந்து குமட்டிக்கொண்டு வந்தது. எனக்கு தம்பியென்று ஒருவன் இருந்திருந்தால் அவன் வயதில்தான் இருந்திருப்பான். நான் கல்யாணம் செய்துகொண்ட இத்தனை காலத்திற்கு, என் புருசன் சாகாமலிருந்து, அப்பொழுதே எனக்கெ...

வித்யாவுக்கு மூன்று அப்பாக்கள்

இரண்டாவது அப்பா பற்றியக் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தாள் சுகந்தி. இருவரில் எனக்கு பிடித்தது முதல் அப்பாதான் எனச் சொல்கையில், வித்யா அவளது முகத்தை நின்று திரும்பிப் பார்த்தாள். இதைச் சொல்ல இவளுக்கேன் வெட்கமில்லை, என அலப்புறுவதைப் போல அவளது பார்வை இருந்தது.  வித்யாவின் முகம் அவளையும் அறியாமல் சுழிந்தது. அவளது முகச்சுழிப்பைச் சுகந்தி கவனித்திருக்கவில்லை. கவனித்திருந்தால், அனிச்சம் போல, முகம் வாடியிருப்பாள். ‘ஏனடி முகம் சுழித்தாய்’, எனக் கேட்டு சண்டைப் பிடித்திருப்பாள்.  சுகந்தி சொன்ன, இரண்டு அப்பாக்கள்…, அதுகுறித்து நினைக்கையில், வித்யாவுக்குச் சிரிப்பு வந்தது. அவளைச் சிரிக்கவிட்டால், சித்தி சீரியலில் டைட்டில் பாடலுக்குப் பின்னே சிரிக்கும், குழந்தையைப்போல சிரிக்கிறவள். முன் பல்வரிசை மொருதைக்குள் முட்டிய சிரிப்பை, உதட்டுக்குள் அதக்கி, தொண்டைக்குள் விழுங்குகையில், அவளது தொண்டை முடிச்சு, நெல்லி உருண்டையாக உருண்டது.  ‘நெசமாவே ஒனக்கு ரெண்டு அப்பாவா..?’ இரைக்கொத்தும் காக்கையைப் போல, தலையை ஒரு பக்கமாகச் சாய்த்துக்கொண்டு கேட்டாள் வித்யா. அவளது முதுகில் ஒரு பக்கமாகப் புத்தகப்பை அணைந...